சிபிஐ வசம் போகுமா பண்ணையார் வழக்கு?
சென்னை:
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி ராதிகா செல்வி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக நாடார் இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த வெங்கடேச பண்ணையார் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தங்களை பண்ணையார் தாக்க முயன்றதால் அவரை சுட்டுக் கொன்றதாக அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் கூறினார்.
ஆனால், நாடார் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு காரணமாக விஜய்குமார் மாற்றப்பட்டு அதிரடிப்படைக்கு அனுப்பப்பட்டார்.
வெங்கடசே பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை மாநில அரசு நியமித்தது. ஆனால் கமிஷன் நியமிக்கப்பட்ட சில நிாட்களிலேயே திருச்சியில் நீதிபதி ராமனின் மருமகன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில், வெங்கடேச பண்ணையாரின் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அவரது மனைவியும், திருச்செந்தூர் திமுக எம்.பியுமான ராதிகா செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், என்கெண்டர் என்ற பெயரில் எனது கணவரை போலீஸார் வேண்டும் என்றே சுட்டுக் கொன்று விட்டனர். இதுதொடர்பாக நியமிக்கப்பட்ட ராமன் கமிஷன் விசாரணையை இன்னும் தொடங்கவே இல்லை.
எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம் மனுவை விசாரித்த நீதிபதி சிவசுப்ரமணியம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர கமிஷனர், மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications