For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையிலிருந்து விஜயேந்திரர் விடுதலை: காமாட்சியம்மன் கோவிலில் முகாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Vijayendrarசங்கரராமன் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட விஜயேந்திரர் இன்று சிறையில் இருந்து விடுதலையானார். அவர் சென்னை அடையாறில் உள்ள சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயில் மடத்தில் தங்குகிறார்.

ஜாமீனில் வெளியில் வந்தால் சாட்சிகளை சந்தித்துப் பேசவோ, கலைக்கவோ மாட்டேன் என்ற ஜெயேந்திரரின் உத்தரவாதம் அடங்கிய பிரமாண பத்திரத்தை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் இன்று காலை சமர்பித்தனர். விஜயேந்திரரின் பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து விஜயேந்திரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு சென்னை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதையடுத்து விஜயேந்திரர் இன்று பகல் 2 மணிக்கு விடுதலையானார்.

32 நாட்களுக்குப் பின் விடுதலையான விஜயேந்திரருக்கு சிறை வாயிலில் பா.ஜ.கவினரும் சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்களும் காஞ்சி மட பக்தர்களும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

பின்னர் அவர் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமான காமாட்சி அம்மன் கோவில் மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் ஆசி பெற ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், கோயிலுக்குள் சென்ற விஜயேந்திரர் வெளியே வரவில்லை.

இந் நிலையில் பக்தர்களை சந்தித்த மடத்தின் நிர்வாகி ஒருவர், விஜயேந்திரர் மெளன விரதத்தில் இருக்கிறார் என்று சொல்லி அவர்களைத் திரும்பப் போகச் செய்தார்.

விஜயேந்திரர் சென்னையில் தான் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

வழக்கறிஞர் பேட்டி:

இந் நிலையில் காஞ்சி மடத்தின் வழக்கறிஞர் தியாகராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்த வழக்குகளால் மிகப் பெரும் பதற்றம் நிலவியது. இப்போது விஜயேந்திரர் விடுதலையாகிவிட்டதால், கொஞ்சம் அமைதி திரும்பியுள்ளது.

ஜெயேந்திரர் கலவையில் இருக்கிறார். விஜயேந்திரர் சென்னையில் இங்கு இருக்கிறார். பூஜைகளை ஜெயேந்திரர் மேற்கொள்வார். சிறிது காலத்திற்கு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலை உள்ளது. அவர்கள் விரும்பியா இந்தக் கைது நடந்து?, அதுவாக நடந்தது.

கடவுளின் விருப்பம் மற்றும் சட்டத்தின் நடவடிக்கை இதில் அடங்கியுள்ளது.

விஜயேந்திரரின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மனுத் தாக்கல் செய்வது குறித்து சில நாட்களில் முடிவெடுப்போம் என்றார்.

பக்தரின் கோபம்:

விஜயேந்திரரைக் காண கோயிலின் வெளியே கூடிய பக்தர்களில் ஒருவர், அங்கு நின்றிருந்த நிருபர்களிடம் வந்து, சங்கராச்சாரியார்கள் கைது மற்றும் மடம் குறித்து தவறான செய்திகளை போடுகிறீர்கள். அதை நிறுத்துங்கள் என்றார்.

ரொம்ப கோபப்பட்ட அவரை பிற பக்தர்கள் சமாதானப்படுத்தி, அங்கு உளவுப் பிரிவு போலீசாரும் நடமாடுவதை எடுத்துச் சொல்லி, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X