உளவாளி கொலை வழக்கு: விடுவிக்க நக்கீரன் கோபால் கோரிக்கை
கோவை:
போலீஸ் உளவாளி கொலை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நக்கீரன்ஆசிரியர் கோபால் உள்ளிட்ட 4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
போலீஸாருக்கு தங்களைப் பற்றிய தகவல்களை போலீஸ் உளவாளி பக்தவச்சலம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வீரப்பன் கும்பல்அவரை கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் வீரப்பன் கும்பலுக்கு உதவியாக இருந்ததாகக் கூறி நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர் சிவசுப்ரமணியன், தமிழ்த்தீவிரவாதிகள் பாஷா மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி நான்கு பேரும் கோவை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில்,1998ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பக்தவச்சலம் காணாமல் போனதாக அவரது தந்தை போலீஸில் புகார் செய்ததாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குற்றப்பத்திரிக்கையில், 1998ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியே வீரப்பன் கும்பல் பக்தவச்சலத்தைக் கொலை செய்து விட்டதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
முரண்பாடான தகவல்களைக் கொண்டு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. பழி வாங்கும் நோக்கில் ஜோடிக்ப்பட்ட வழக்கு இது. சம்பவம்நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு தொடரப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்று கோபாலின் வழக்கறிஞர் மோகன் மனுவில்தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ரத்னவேல் திங்கள்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மனு தாக்கலையொட்டி கோபால் உள்ளிட்டோர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். சிறைக் காவலில் உள்ள பாஷாவும், சத்தியமூர்த்தியும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டிருந்தனர்.