நாகை: சோகம் போனது; இப்போது திருமண சீசன்
நாகப்பட்டனம்:
சுனாமியால் ஏற்பட்ட சோகம் மறைந்து இப்போது நாகை மாவட்டத்தில் சந்தோஷம் திரும்பத் தொடங்கியுள்ளது.
டிசம்பர் 26ம் தேதி வீசிய சுனாமி அலைகளில் சிக்கி நாகை மாவட்டம் சின்னாபின்னமானது. திரும்பிய பக்கமெல்லாம் பிணங்களாகக்காணப்பட்டன. வீடுகளை, உறவுகளை இழந்து மக்கள் பரிதவித்தனர்.
இந்த சோகம் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பலதிருமணங்கள் நாகையில் நடப்பதாக இருந்தன. ஆனால் சுனாமி சோகத்திலிருந்து இன்னும் விடுபடாததால், திருமணங்களைத் தள்ளிவைத்தனர்.
தள்ளி வைக்கப்பட்ட திருமணங்கள் தற்போது நடந்தேற ஆரம்பித்துள்ளன. நேற்று மட்டும் மொத்தம் 16 திருமணங்கள் சுனாமிபாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்தன. நாகப்பட்டனத்தில் 8 கல்யாணங்களும், தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் பகுதியில் 8கல்யாணங்களும் நடந்தன.
நாகை நீலதாயாட்சி அம்மன் கோயிலில் 8 கல்யாணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சித் தலைவர்ஜே.ராதாகிருஷ்ணன், தனது மனைவியுடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். மாப்பிள்ளைகள் 8 பேரிடமும் அவர் தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் நடந்தேறியது.
கல்யாணம் நடந்த வீடுகளைச் சேர்ந்த பலரும் சுனாமிக்குப் பலியாகி விட்டனர். அந்த சோகத்திலிருந்து அவர்கள் விடுபட இந்தகல்யாணங்கள் கொஞ்சம் உதவின என்றால் மிகையாகாது.