12 பேர் இருந்தும் என்ன புண்ணியம்? திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை:
தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் தமிழகத்தில் எந்தவித வளர்ச்சிப் பணிகளுக்கும் அவர்கள் உதவாததுவருத்தம் தருகிறது என்று பாஜக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில், பாஜக நிறுவனர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நினைவு தினத்தையொட்டி கூட்டம் நடந்தது.அதில் கலந்து கொண்டு திருநாவுக்கரசர் பேசுகையில்,
தமிழகத்தில் ஒரு வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. இதற்கு இங்கிருந்து மத்திய அமைச்சர்களாக உள்ள 12 பேரும்தான் காரணம்.பேருக்குத்தான் அவர்கள் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் மாநில அரசுடன் இணக்கமான சூழ்நிலை இல்லை.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சுமூக உறவு இல்லாத நிலையில் வளர்ச்சிப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாது. 12மத்திய அமைச்சர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினாலும் அவர்களால் மாநிலத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு, பாஜக கூடடணியை விட 7 எம்.பிக்கள்தான் அதிகம் உள்ளனர். இதைவைத்து தங்களுக்கு மெஜாரிட்டி உள்ளதாக அவர்கள் கூறுவது கேலிக் கூத்தாக உள்ளது.
கம்யூனிஸ்டுகள் கூடவே இருக்கும் வரை காங்கிரஸ் அரசால் ஒரு முடிவையும் உருப்படியாக எடுக்க முடியாது, அவர்கள் எடுக்க விடமாட்டார்கள். பாஜக மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸுக்கு ஆதரவு தருகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றார்திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications