சிங்கப்பூருக்கு சென்றாரா ஆசிரியை மீனாட்சி?
குளித்தலை:
காணாமல் போன ஆசிரியை மீனாட்சி சிங்கப்பூருக்குச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுவதால் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளியில் வேலை பார்த்து வந்த மீனாட்சி என்ற ஆசிரியையைக் காணவில்லை. அவரை குளித்தலைஎம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம், அவரது மகன் கருணாகரன் ஆகியோர்தான் கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்று கூறி மீனாட்சியின் கணவர்ஜோதி ராமலிங்கம் போலீஸில் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்தப் புகாரின் மீது குளித்தலை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையை நாடினார் ஜோதி ராமலிங்கம். இதைத் தொடர்ந்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார் பாப்பாசுந்தரத்தின் மகன் கருணாகரன், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கத்தையும் அவர்கள் சென்னைக்கு அழைத்து விசாரித்தனர்.
இந் நிலையில் ஆசிரியை மீனாட்சிக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையான விஜயலட்சுமி என்பவருக்கும் நெருக்கமான நட்புஇருந்ததாக தெரிய வந்ததால் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமியின் மருமகன் சிங்கப்பூரில் உள்ளார். காணாமல் போவதற்கு 3 நாட்களுக்கு முன் மீனாட்சி சிங்கப்பூரில் யாருடனோநெடுநேரம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதனால் மீனாட்சியே விருப்பப்பட்டு சிங்கப்பூருக்குச் சென்றிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.