போலீசுக்கு எதிராய் கிளம்பிய காஞ்சி வழக்கறிஞர்கள்
காஞ்சிபுரம்:
சங்கர மட பெண் வழக்கறிஞர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் அறிவித்துள்ளதைக்கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் 3 நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தாக சங்கர மட வழக்கறிஞர்கள் நான்கு பேர்மீது காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் புகார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக ரேவதி, நசீமா பானு ஆகிய இரு பெண் வழக்கறிஞர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக சங்கத் தலைவர் மதனகோபால்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை, நீதிமன்ற அனுமதியின்றியோ, போலீஸார் அனுமதியின்றியோ, சிறை நிர்வாகத்தின் அனுமதிஇன்றியோ எந்த வழக்கறிஞரும் சென்று சந்திப்பது இயலாத காரியம், நடக்க முடியாத காரியம்.
இந் நிலையில், எங்களது சங்கத்தைச் சேர்ந்த 2 பெண் வழக்கறிஞர்கள் போலீசாருக்குத் தெரியாமல் ரவி சுப்பிரமணியத்தை சிறையில்சென்று எப்படி பார்த்திருக்க முடியும்?
அந்த இருவர் மீதும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப் போவதாக போலீஸார் கூறுவது கடும் கண்டனத்துக்குரியது. சில போலீஸ்அதிகாரிகள் திட்டமிட்டு எங்களது வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து 3 நாட்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துவியாழக்கிழமைக்கு முன்னதாக அறிவிப்போம் என்றார் மதனகோபால்.
சங்கர மட வழக்கறிஞர்களான தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீமா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்றே வழக்கப்பதிவு செய்ய தனிப்படை போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் வழக்கறிஞர்கள் சங்கத்தின் திடீர் போராட்ட அறிவிப்பு காரணமாக அதை போலீஸார் ஒத்திவைத்து விட்டதாக கூறப்படுகிறது.
நீதிபதி கருத்து:
இதற்கிடையே தன்னை சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் சிறையிலேயே வந்து மிரட்டியதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரி ரவி சுப்பிரமணியம் தன்னிடம் தந்த மனுவின் மீது முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று காஞ்சி நீதிமன்றமாஜிஸ்திரேட் உத்தமராஜன் கூறியுள்ளார்.