25ம் தேதி வரை குருமூர்த்தி கைதில்லை!
சென்னை:
ஆடிட்டர் குருமூர்த்தியை பிப்ரவரி 25 ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என்று அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
தன் மீது காஞ்சிபுரம் போலீஸார் போட்டுள்ள வழக்குக்கு இடைக்கால தடை கோரி குருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.டி.சிவசுப்ரமணியம், வருகிற 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை குருமூர்த்தி தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் காஞ்சிபுரம் போலீஸார் தன்னை கைது செய்யப் போவதாக மிரட்டுவதாகவும், எனவே தனது மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குருமூர்த்தி கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவசர மனுவை நீதிபதி சிவசுப்ரமணியம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அப்போது குருமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், டெல்லியில் தங்கியுள்ள குருமூர்த்தியை செல்போன் மூலம் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகனவேலு தொடர்பு கொண்டு பிப்ரவரி 22ம் தேதிக்கு சென்னைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் டெல்லிக்கு வந்து உங்களை கைது செய்ய வேண்டி வரும் என்று மிரட்டியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து சரிவர தகவல்கள் கூட தெரியாத நிலையில் உள்ள மோகனவேலு, எனது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார். உயர்நீதிமன்றத்தில் என்ன வழக்கு நடந்து கொண்டுள்ளது, ஜாமீன் மனுவே நான் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில் அது நிராகக்கப்பட்டதாக அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு நாளாவது என்னை கைது செய்து சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று போலீஸார் துடிப்பது புரிகிறது என்று கூறியிருந்தார்.
குருமூர்த்தி தரப்பு வாதத்திற்குப் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார் அரசு வழக்கறிஞர். இதைத் தொடர்ந்து மனுவை வருகிற 25ம் தேதி விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார். அதுவரை குருமூர்த்தியைக் கைது செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்புக்கு அவர் உத்தரவிட்டார். அதை ஏற்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications