சிக்கியது ஜெவின் கார்: வந்தது வைகோலுக்கு தடை!
திருப்போரூர்:
சாலையில் போடப்பட்டிருந்த வைக்கோலில் முதல்வர் ஜெயலலிதாவின் கார் சிக்கியதால் இனிமேல் சாலையில் வைக்கோல் காய வைக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
கடந்த வாரம் முதலமைச்சர் ஜெயலலிதா தனது உயிர்த்தோழி சசிகலாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் முகாமிட்டிருந்தார். இங்கு சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பினார்.
பையனூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, நெல்லை பிரித்தெடுப்பதற்காக சாலையில் விவசாயிகள் வைக்கோலை பரப்பி வைத்திருந்தனர்.
இந்த வைக்கோல், முதல்வரின் காரில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புக்காக வந்த போலீஸார் ஓடி வந்து வைக்கோலை அகற்றிய பிறகே முதல்வரின் கார் அங்கிருந்து செல்ல முடிந்தது.
இச் சம்பவத்தையடுத்து செங்கல்பட்டு மண்டல நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், மாமல்லபுரம் மற்றும் திருப்போரூர் காவல் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் விவசாயிகள் வைக்கோல் போர் போட்டு அடித்தல், காய வைத்தல் போன்ற பணிகளை செய்வதாகவும் அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே சாலைகளில் வைக்கோல் காய வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications