தேர்தலுக்கு தயாரவோம்: திமுகவினருக்கு அன்பழகன் அழைப்பு
திண்டுக்கல்:
சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவினர் இப்போதே தயாராக வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று தொடங்கிய மண்டல மாநாட்டின் முதல் நாள் நிறைவாக அன்பழகன் உரையாற்றினார். அவரது பேச்சு:
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பெரும் கடமையை திமுக ஏற்றுக் கொண்டிருக்கிறது.அதனால்தான் இன்னும் அது ஏறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்களை ஒரு குடும்பமாக மாற்றும் மாபெரும் பணி நமக்கு உள்ளது. சாதி உணர்வு ஒழிய வேண்டும், தமிழின உணர்வு வளர வேண்டும்.அண்ணா விரும்பிய அந்த லட்சிய, தியாகக் குடும்பத்தை ஏற்படுத்தும் அணியைத்தான் உருவாக்கியுள்ளோம்.
பெண்ணடிமைத்தனம், தீண்டாமை ஒழிய வேண்டும். தமிழர்களுக்கு இன உணர்வு வளர வேண்டும். தமிழுக்கு செம்மொழி என்ற உரியதகுதியை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.
மரம் வெட்டுகிறார்கள் என்று நம்மைப் பார்த்துக் கூறியுள்ளார் ஜெயலலிதா. உண்மையில் மரம் வெட்டியிருந்தால் நடவடிக்கை எடுங்கள்என்றுதான் கூறினேன். ஏதோ இந்த மாநாட்டின் விளம்பரச் செயலர் போல முதல்வர் பேசுகிறார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. திமுக தொண்டர்கள் அதற்கு இப்போதே தயாராக வேண்டும். தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்த மாநாடு. ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தை காப்பாற்றமுடியாது என்றார் அன்பழகன்.
முன்னதாக மாநாட்டு மலரை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட அன்பழகன் பெற்றுக் கொண்டார். நடிகர் சந்திரசேகர் நடித்த பேனா ஒருபோர்வாள் என்ற நாடகம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்றது.












Click it and Unblock the Notifications