தொகுதி மறு வரையறை: புது முடிவு
டெல்லி:
சட்டசபைத் தொகுதி மறு வரையறையை, பஞ்சாயத்துக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ள தமிழகத்துக்கான தொகுதி மறுவரையறைக் கமிட்டி முடிவுசெய்துள்ளது.
தமிழகத்துக்கான தொகுதி மறு வரையறைக் கமிட்டியின் கூட்டம் டெல்லியில், மறு வரையறைக் கமிஷன் தலைவர் நீதிபதி குல்தீப் சிங்தலைமையில் நடந்தது. இதில் மத்திய தேர்தல் ஆணையர் டாண்டன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தமிழக தேர்தல்ஆணையர் பழனிச்சாமி, மறு வரையரைக் கமிஷன் சிறப்பு அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் தவிர, விஜயபாஸ்கர், தமிழ் மொழி, சிவசாமி (அதிமுக எம்.எல்.ஏக்கள்), தனராஜ் (பாமக), பொன்முடி, கிருஷ்ணசாமி, சுகவனம்(திமுக), கே.வி.தங்கபாலு, போளூர் வரதன் (காங்கிரஸ்), டாக்டர் கிருஷ்ணன் (மதிமுக) ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தற்போதுள்ள பஞ்சாயத்துக்களை தேவையில்லாமல் பிரிக்கக் கூடாது, மாற்றி அமைக்கக் கூடாது, மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமேஅதுவும் விதிகளுக்குட்பட்டே பிரிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகுபஞ்சாயத்துக்களை அடிப்படையாக வைத்து முடிவெடுக்க ஒரு மனதாக அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டனர்.