சங்கராச்சாரியார்: நிதி திரட்டிய டாக்டருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ரத்து
சென்னை:
சங்கராச்சாரியாரின் வழக்கு செலவுகளுக்கு நிதி திரட்டி, சங்கர மடத்தின் பக்தரான டாக்டர் பாஸ்கருக்குஅனுப்பப்பட்ட சம்மனை போலீசார் ரத்து செய்துவிட்டனர்.
இத் தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார்.
ஜெயேந்திரர் மீதான வழக்குகளை நடத்த மடத்துக்கு நிதி திரட்ட சென்னையைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கர் என்பவர்இணைய தளம் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு வருமாறு கூறி காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சமமன் அனுப்பினர்.
இதை எதிர்த்து டாக்டர் பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவசுப்பிரமணியம் தனிப்படை போலீஸாருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை விட்டுவிட்டு போலீசார் எங்கெங்கோ போய்க்கொண்டிருப்பதாகவும், இதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி காட்டமாகக் கூறினார்.
இந் நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் துரைசாமி, டாக்டர் பாஸ்கர் மீதான சம்மன் ரத்து செய்யப்படுவதாகவும், இதன் மீது மேல் நடவடிக்கைஏதும் இருக்காது என்றும் உறுதிமொழி அளித்தார்.
இதைத் தொடர்ந்து டாக்டர் பாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.