காளிமுத்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: நல்லகண்ணு யோசனை
கன்னியாகுமரி:
முதல்வர் ஜெயலலிதாவும், சபாநாயகர் காளிமுத்துவும் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் விஷயத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பேதரப்படுவதில்லை. முதல்வர் ஜெயலலிதா சின்னப் பிரச்சினையைக் கூட இட்டுக் கட்டிப் பேசி பெரிதாக்கி எதிர்க்கட்சித்தலைவர்களை சாடுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை கேலி செய்தும், கிண்டல் செய்தும் முதல்வர் பேசுகிறார். இது சட்டசபை மரபுகளை மீறிய செயல்.
சபாநாயகர் காளிமுத்துவும் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்கொண்டு வரலாம். ஆனால் சட்டசபை குறுகிய காலமே நடப்பதால், அதற்கு கால அவகாசம் இல்லை என்றார் நல்லகண்ணு.