சுனாமி மையம்: சென்னையில் அமைக்க ஜெ. கோரிக்கை
சென்னை:
சுனாமி வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும், சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும் எனமுதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஜனவரியில் பிரதமரை சந்தித்தபோது, சுனாமிமுன்னெச்சரிக்கை மையம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினேன்.
அதேபோல, பிப்ரவரி 7ம் தேதி மத்திய உள்துறை நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும், இதுகுறித்து விரிவாகவிவாதிக்கப்பட்டது.
தற்போது சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தை, ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய வானிலை மையத்தில் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஹைதராபாத்தில் அந்த மையத்தை அமைப்பதை விட தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அமைப்பதே மிகச் சிறந்ததாகும்.சுனாமி தாக்குதலால் நாகை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த 100 ஆண்டுகளில் தமிழகத்தில் 50 முறை பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. பூகம்பம் குறித்த திருத்தப்பட்ட வரைபடஅறிக்கையில் தமிழகம், 3வது மண்டலத்தில் உள்ளது.
சுனாமியால் தமிழக கடலோர பகுதிகள் கடுமையான உயிர் சேதம், பொருள் சேதத்தை சந்தித்துள்ளன. எனவே சுனாமிமுன்னெச்சரிக்கை மையத்தை சென்னையில் அமைப்பதே பொருத்தமானதாக அமையும்.
சென்னை, தேசிய கடல் ஆராய்ச்சி மையத்திலேயே இந்த சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தை அமைக்கலாம். ஏற்கனவே இந்தமையத்திற்கு போதிய நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளதை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த மையம் சென்னையில் அமைந்தால் தமிழக மக்களுக்கு மனதளவில் அது வலுவூட்டுவதாக அமையும். எனவேஇப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு சென்னையில் முன்னெச்சரிக்கை மையத்தை அமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்என்று தனது கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.