8 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக் காலம் நீட்டிப்பு
சென்னை:
உயர்நீதிமன்ற 8 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் 42 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது 25நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
இந்த 25 பேரில் எஸ். அஷோக் குமார், ஆர். பானுமதி, டி.வி. மாசிலாமணி, எஸ்.கே. கிருஷ்ணன், சர்தார் சக்கரியா உசேன், ஏ.ஆர்.ராமலிங்கம், எஸ்.ஆர். சிங்காரவேலு, எம். தணிகாசலம் ஆகிய 8 பேர் கூடுதல் நீதிபதிகளாவர்.
இவர்களது பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பது வழக்கம். ஆனால் தற்போது 8 நீதிபதிகளையும் 4 மாதத்திற்கு கூடுதல்நீதிபதிகளாக பணிபுரியும் படி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதித்துறை மரபுப்படி இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பதவி ஏற்க வேண்டும். எனவே இவர்களது பதவி ஏற்புவிழா நாளை காலையில் நடைபெறுகிறது. இவர்களுக்கு தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.