குண்டர் சட்ட கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுந்தரேச அய்யர் மனு
டெல்லி:
தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுந்தரேச அய்யர் மனு தாக்கல்செய்துள்ளார்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவை விசாரணைக்கு எடுக்க விடாமல் போலீசார் தடுத்துவருகின்றனர். இம் மாத இறுதியில் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிடும். அதற்கு முன் எனது மனுவிசாரணைக்கு வந்துவிடாமல் தடுக்கின்றனர்.
இதனால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக இருந்தால், அவர் வழக்கமாக குற்றங்கள் செய்பவராக இருக்க வேண்டும்.அத்தகையோர் மீது மட்டும் தான் குண்டர் சட்டம் பாய முடியும். இந்த வழக்கில் என்னைக் கைது செய்தது செல்லாது.
69 வயதான நான் ரிசவ்ர் வங்கியில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவன். காஞ்சி மடத்தில் சேர்ந்து சமூக சேவை செய்துவருகிறேன். என்னை குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்ட விரோதமான செயல். இந்த வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன்கிடைத்துவிட்டதால், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துவிடும் வாய்ப்பு உளளது.
அதைத் தடுக்கத் தான் குண்டர் சட்டத்தை பிரயோகித்து என்னைப் போன்றவர்களைக் கைது செய்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் நான் பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்த மனு 2 மாதமாக விசாரணைக்கே வரவில்லை. இது அடிப்படைஉரிமை மறுக்கப்படுவதற்கு சமம். எனவே எனது மனுவை ஏற்று என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்து விரைவாக தீர்ப்பளிக்கஉத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் சுந்தரேச அய்யர்.