தமிழகத்தில் கனமழை: கடல் உள்வாங்கியதால் அச்சம்
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்றும் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் கோடை மழை அதிக அளவு பெய்து வருவதாக வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் தொடர்ந்து நல்ல மழை பெய்துவருகிறது. இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 21.6 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 30.6 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இதே போல தமிழ்நாடு முழுவதும் பரவலாக இன்றும் நல்ல மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், பாண்டிச்சேரி, காரைக்கால்,கடலூர், சிதம்பரம், மதுரை, ராமநாதபுரம், திரச்சி, கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, விருதுநகர்,கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட பல மாவட்டங்களில் இன்றும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் இப்பகுதியில் மீனவர்கள் யாரும்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதே போல நாகை மாவட்டத்திலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் யாரும்மீன் பிடிக்க செல்லவில்லை.
நாகை கடலோர பகுதிகளில் பல பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தற்காலிக குடியிருப்புகள்அமைக்கப்பட்டிருந்தன. இந்த குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது. இதனால் இங்குள்ள அனைவரும் பாதுகாப்பாகதிருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்றும்இம்மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
பாளையங்கோட்டையில் இன்று கனமழைக்கு மின்சாரம் தாக்கி தாய், மகள் ஆகியோர் இறந்தனர். இதுவரை தமிழ்நாட்டில்மழைக்கு 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
புயல் சின்னம் வலுப்பெற்றுள்ளதால் நாளை மாலை வரை மழை நீடிக்கும் என்று வானிலை இலாகாவினர் அறிவித்துள்ளனர்.
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் கன மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர் என்ற கடலோரப் பகுதியில் நேற்று இரவு கடல் திடீரென 100 மீட்டர் உள்வாங்கியது.இதனால் சுனாமி ஏற்படுமோ என அஞ்சி இப்பகுதி மக்கள் இரவோடு இரவாக பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றனர்.
சிறிது நேரத்தில் உள்வாங்கிய கடல் பேரலையாக உருவாகி கரையை நோக்கி வந்து ஏராளமான படகுகளை இழுத்து சென்றது.இதில் 20க்கும் மேற்பட்ட படகுகள் முற்றிலும் சேதமடைந்தன.
இது தவிர வலைகள் உட்பட ஏராளமான மீன் பிடி சாதனங்களும் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications