என் வழி தனி வழி..: விஜய்காந்த்
சென்னை:
தான் புதுக் கட்சி தொடங்கியதும் மற்ற கட்சிகளில் உள்ள தனது ரசிகர்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி விடுவார்கள் எனவிஜய்காந்த் கூறியுள்ளார்.
கேள்வி: புதுக் கட்சி தொடங்கினால் திராவிடக் கலாச்சாரம், தேசியக் கலாச்சாரம் ஆகியவற்றில் எதைப் பின்பற்றுவீர்கள்?
விஜய்காந்த்: எங்கள் வழி தனி வழி (இப்படித்தான் ரஜினியும் சொன்னாரு). மக்கள் கலாச்சாரத்தைப் பின்பற்றுவோம்.
கேள்வி: இளம் கதாநாயகர்கள் ரொம்பப் பேர் வந்துவிட்டதால் ஓய்வு நிலைக்குச் சென்றதால் அரசியலுக்கு வருகிறீர்களா?
வி.காந்த்: யார் சொன்னது? நான் இன்னும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அரசியல் என் சிறு வயது ஆர்வம்.
கேள்வி: அப்படியானால் முன்பே அரசியலுக்கு வந்திருக்கலாமே?
வி.காந்த்: தனிப்பட்ட பலத்துக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்.
கேள்வி: அரசியலில் உங்களுக்கு வழிகாட்டிகள் யார்?
வி.காந்த்: காமராஜரும் எம்ஜிஆரும்
கேள்வி: கட்சி தொடங்கினால் நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா?
வி.காந்த்: நடிகர் சங்க பொறுப்பில் இப்போது உள்ள பலரும் அரசியலில் இருக்கிறார்கள்.
கேள்வி: அரசியலில் உங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்கிறாரே வைகோ?
வி.காந்த்: பழுத்த மரம் மீது தானே கல் விழும் (அட.. பழுத்த அரசியல்வாதி மாதிரியே பேசுறாரே)
கேள்வி: சிவாஜியே கட்சி தொடங்கியது நான் செய்த பெரிய தவறு என்று கூறியிருக்கிறாரே?
வி.காந்த்: எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எப்படி தைரியம் வந்தது. அதே தைரியம் எனக்கும் உண்டு.
கேள்வி: உங்கள் ரசிகர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்களே? நீங்கள் கட்சி தொடங்கினால் அவர்கள் நிலை என்ன?
வி.காந்த்: நான் கட்சி தொடங்கியதும் மற்ற கட்சிகளில் உள்ள என் ரசிகர்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்வார்கள்.
கேள்வி: யாருடன் கூட்டணி?
வி.காந்த்: இப்போதுள்ள சூழலில் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டோம். தனி கூட்டணி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications