ஈரோடு மாநகராட்சி ஆவது எப்போது?
ஈரோடு:
ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை நகரம் மாநகராட்சி அந்தஸ்தை எட்டி 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 3நகரங்களும் 15 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி அந்தஸ்தை எட்டின.
இந்த நிலையில் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கு முன்னோட்டமாக,ஈரோடு நகராட்சியை சுற்றிலும் உள்ள பல்வேறு பேரூராட்சிகள், நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் மாநகராட்சிஅந்தஸ்து பெறுவதற்குத் தேவையான மக்கள் தொகை கிடைத்தது.
நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக் கோரி ஈரோடு நகராட்சியிலும் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனைத்துஏற்பாடுகளும் முடிந்து விட்டன. இந் நிலையில் தொகுதி மறு வரையறைப் பணிகள் தற்போது நடந்து வருவதால் அது முடியும்வரை நகராட்சி எல்லையை மாற்றக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு வரையறைக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தொகுதி மறு வரையறை முடிந்தவுடன் தான் இத்திட்டத்தை அமல்படுத்த முடியும் என்பதால் தற்போதைக்கு ஈரோடு நகராட்சி,மாநகராட்சியாக உயர்த்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஈரோடு எம்எல்ஏ தென்னரசு கூறுகையில், ஈரோடு நகராட்சியை தரம் உயர்த்தும் பணியை தமிழக அரசுவிரைவுபடுத்த வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் இதை தாமதப்படுத்தக் கூடாது. இணைக்கப்பட்ட பேரூராட்சிகளையும்சேர்த்து ஈரோடு நகரின் எல்லை 110 சதுர கிலோமீட்டாரக உள்ளது. மக்கள் தொகை 4.10 லட்சமாக உள்ளது. நகராட்சியின்வருமானம் ரூ. 38.90 கோடியாக உள்ளது.
எனவே இத்திட்டத்தை விரைவுபடுத்தி நீண்ட காலமாக ஈரோடு மக்கள் கோரி வரும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்என்று கூறியுள்ளார்.