குட்டை உடைத்த ஜெ: நெளிந்த திமுக எம்எல்ஏக்கள்
சென்னை:
எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை உயர்த்தியது தொடர்பாக திமுக உறுப்பினர் கேட்ட கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் பட்டியலிட்டதால் திமுக உறுப்பினர்கள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர்.
ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டு முடித்த பின்னர் எழுந்த திமுக துணைத் தலைவர் துரைமுருகன்,
எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக திமுக கோரிக்கை வைத்ததாக முதல்வர் எதை வைத்துக் கூறுகிறார்? அப்படி எந்தக்கோரிக்கையையும் திமுக வைக்கவில்லை என்றார்.
உடனே எழுந்த ஜெயலலிதா, ஊதிய உயர்வு தொடர்பாக திமுக தரப்பிலிருந்து கோரிக்கை எதையும் வைக்கவில்லை என்றுதுரைமுருகன் கூறுகிறார். ஆனால் திமுகவைச் சேர்ந்த புரசைவாக்கம் தொகுதி உறுப்பினர் ப.ரங்கநாதன் இதுதொடர்பாக 2வெட்டுத் தீர்மானங்களை கொடுத்திருந்தார் என்பதை அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தனது முதல் வெட்டுத் தீர்மானத்தில் உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ. 20,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று ரங்கநாதன்கோரியிருந்தார்.
இன்னொரு தீர்மானத்தில், சட்டசபை உறுப்பினர்கள் தொகுதி அலுவலகத்திற்கு இலவச குளிர்சாதனப் பெட்டி, இலவச வண்ணத்தொலைக்காட்சி ஆகியவை வழங்க வேண்டும். இதுதொடர்பாக சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
ரங்கநாதனின் இந்த வெட்டுத் தீர்மானங்கள் குறித்தும், திமுகவைச் சேர்ந்த அவரின் கோரிக்கைகள் குறித்தும் துரைமுருகனின்கருத்தை அறிய விரும்புகிறேன் என்றார்.
ஜெயலலிதா இவ்வாறு கூறியபோது துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். மாறாக அதிமுகஉறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கருணாகரன் எழுந்து, இந்த ஊதிய உயர்வு இப்போது தேவையா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, ஊதிய உயர்வு தேவையில்லை என்று உறுப்பினர் கருதினால், அதை முதல்வர் பொது நிவாரணநிதிக்கு வழங்கலாம் என்றார்.
இதுகுறித்து மேலிடத்தில் கேட்டுத் தெரிவிப்பதாக கருணாகரன் கூறியபோது, அதிமுக உறுப்பினர்கள் தரப்பில் பலத்த சிரிப்பொலிஎழுந்தது.












Click it and Unblock the Notifications