வீட்டுச் சுவரில் மின்வேலி: சிறுவன் உயிர் ஊசல்
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பகுதியில் வீட்டுப் பாதுகாப்புக்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியைத் தொட்ட 14 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான்.
பட்டேல் நகரில் வசிக்கும் லாரி டிரைவர் ராஜா. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். பட்டேல் நகரில்ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் தொல்லை அதிகம் என்று கூறப்படுகிறது.
இதை அறிந்த சரஸ்வதி, தனியாக வீட்டில் இருக்கப் பயமாக இருப்பதாக கூறி அழுதுள்ளார். அவரது மகள்களும் பீதியில்ஆழ்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக, தனது வீட்டுக் காம்பவுண்டு சுவரில் மின்வேலியை அமைத்துள்ளார் ராஜா.இரவில் இந்த மின்வேலியில் மின்சாரத்தைப் பாய்ச்சுவது வழக்கம்.
இதைத் தொடர்ந்து ரவுடிகளின் தொல்லை கொஞ்சம் குறைந்துள்ளது. இந் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற14 வயது சிறுவன் மின்சார வேலியை தற்செயலாக தொட்டுள்ளான். இதில் மின்சாரம் தாக்கி அவன் படுகாயமடைந்தான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது விமல்ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சட்ட விரோதமாக மின்வேலிஅமைத்ததற்காக ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.