தமிழக அரசியல் நிலவரம்: பாஜக- ஆர்எஸ்எஸ் ஆலோசனை
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் சிந்தனைக் கூட்டம் சென்னை அருகே முட்டுக்காட்டில் இன்று காலை தொடங்கியது. பாஜக கூட்டம் என்றுகூறப்பட்டாலும் இதில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.
திமுக ஒதுக்கி வைத்து விட்டதாலும், காஞ்சி விவகாரத்தால் அதிமுகவுடன் கூட்டு சேர முடியாத சூழல் நிலவுவதாலும் வரும் சட்டசபைத்தேர்தலில் மேற்கொள்ளப்படவேண்டிய அணுகுமுறை இக் கூட்டத்தில் பேசப்படுகிறது.
உத்தண்டி நைனாகுப்பம் என்ற இடத்தில் கடலோர ரிசார்ட்டில் நடக்கும் இக் கூட்டத்தில் தமிழக தலைவர்களான திருநாவுக்கரசர்,இல.கணேசன், ராதாகிருஷ்ணன், சுகுமாறன் நம்பியார், எச்.ராஜா, லலிதா குமாரமங்கலம் மற்றும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்,பிராமண சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இக் கூட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும் மனம்விட்டு நடக்கிற கருத்துப் பரிமாறல் இது. தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது என்றார்.
இக் கூட்டம் நாளை முடிவடைகிறது.