அமைச்சர்களே மறியல் செய்வதா? உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை:
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களே சாலை மறியலில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியதுஎன்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு நேற்று நடந்த தேர்தலின் போது வன்முறை மூண்டது தொடர்பாக திமுக வேட்பாளர்ராமமூர்த்தியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரனிடம், தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி மொழி கொடுக்கப்பட்டதே, அது என்னவாயிற்று என்று நீதிபதிகள் கேட்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சாதாரண பொதுமக்களைப் போல அமைச்சர்களே சாலையில் அமர்ந்து மறியல்செய்துள்ளனர். சாதாரண பொதுமக்கள் மறியல் செய்வதற்கும், அமைச்சர்கள் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்களே இப்படி சாலை மறியல் செய்வது ஆரோக்கியமானதுஅல்ல. சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில் அமைச்சர்கள் செயல்படலாமா என்றார்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயன்றார். அதற்கு நீதிபதிகள்,அமைச்சர்களின் செயலை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றனர். இதையடுத்து மன்னிக்கவும் என்று தெரிவித்தார்என்.ஆர்.சந்திரன்.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.