அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் குறித்து திமுகவினர் புகார் கூறியிருந்தால், அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு நடந்த இடைத் தேர்தலின்போது பெரும் வன்றை மூண்டது. அதிமுகவினர் கள்ள ஓட்டுப்போடுவதிலும், பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபடுவதாக கூறி திமுகவினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக திமுக வேட்பாளர் ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த 19ம் தேதி விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர், அமைச்சர்கள் சாலைமறியல் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரைணக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் சோமையாஜுலு பதில் மனுவைத்தாக்கல் செய்தார். அப்போது, திமுக தரப்பில் புகார் ஏதும் வந்ததா என்று நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு அரசு வக்கீல் இல்லை என்றார். மேலும் தொடர்ந்து கூறுகையில், அமைச்சர்கள் சாலை மறியல் செய்யவில்லை. சாலைமறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகவே அங்கு சென்றார்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் சாலை மறியல் செய்யவில்லை என்று கூறி மறுக்க வேண்டாம் என்றுகண்டிப்புடன்கூறினர். பின்னர், திமுகவினர் இதுகுறித்து புகார் கூறியிருக்கிறார்களா என்று சரி பார்த்து, அப்படிக் கூறியிருந்தால்வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications