கர்நாடக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 27,600 கோடியாக உயர்வு
பெங்களூர்:
2004-05ம் ஆண்டில் கர்நாடகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 27,600 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 52சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டில் (2005-06ம்) சாப்ட்வேர் ஏற்றுமதியை ரூ. 35,000 கோடியாக அதிகரிக்க அம் மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இதன்மூலம் 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
கடந்த ஆண்டில் மட்டும் 129 வெளிநாட்டு நிறுவனங்கள் பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்களில் ரூ. 2,783 கோடியை முதலீடுசெய்யவும், நிறுவனத்தைத் தொடங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சராசரியாக 3 நாட்களுக்கு ஒரு நிறுவனம் என்ற விகிதத்தில் பெங்களூரில் சாப்ட்வேர் தொழிலைத் தொடங்கியுள்ளன.
கர்நாடகத்தின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் 63 சதவீதம் அமெரிக்காவுக்கும், 23 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும்சென்றடைந்துள்ளன.
மொத்த சாப்ட்வேர் உற்பத்தியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு 50 சதவீதமாக இருந்துள்ளது.
மைசூர், மங்களூரில் இருந்தும் ரூ. 876 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடந்துள்ளது.
கர்நாடகத்தின் ஹார்டுவேர் ஏற்றுமதி கடந்த ஆண்டில் ரூ. 1,768 கோடியைத் தாண்டியுள்ளது. ஹார்டுவேர் தயாரிப்பில் ஈடுபடகடந்த ஆண்டில் 8 புதிய நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரில் ஹார்டுவேர் தயாரிப்பில்ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.