பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் நிகழ்ச்சி: கலாம் ஸ்ரீஹரிகோட்டா வருகை
சென்னை & ஸ்ரீஹரிகோட்டா:
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து நாளை மறுதினம் (5ம் தேதி) பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண ஜனாதிபதி அப்துல் கலாம் வருகிறார்.
இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டதில் கலாமுக்கும் முக்கிய பங்குண்டு. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தாவன் விண்வெளி மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 2வது ராக்கெட் ஏவும் தளத்தில் இருந்து முதன் முறையாக இந்த பிஎஸ்எல்வி-6 ராக்கெட் ஏவப்படுகிறது.
அந்த ராக்கெட் 1560 கிலோ எடையுள்ள கார்டோசாட்-1 மற்றும் 42 கிலோ எடையுள்ள ஹாம்சாட் ஆகிய இரு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும்.
ராக்கெட் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் இன்று (3ம் தேதி) காலை 5.49 மணிக்குத் தொடங்கியது.
பிஎஸ்எல்வி விண்ணில் பறப்பதைக் காண நாளை (புதன்கிழமை) இரவு சென்னை வருகிறார். ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், காலை ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார்.
பின்னர் சென்னை திரும்பும் அவர் தனி விமானத்தில் டெல்லி திரும்புவார்.
திருப்பதியில் இஸ்ரோ தலைவர்:
இதற்கிடையே பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவரான மாதவன் நாயர் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.