ராபின்மெயின் வழக்கு: இன்றும் ஆஜராகாத காளிமுத்து
சென்னை:
ராபின்மெயின் வழக்கு தொடர்பாக தமிழக சபாநாயகர் காளிமுத்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 1984ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் அளவுக்கு வங்கிகளில் மோசடி செய்ததாக ராபின் மெயின் மீதுசிபிஐ வழக்குத் தொடர்ந்தது. அப்போது எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த காளிமுத்து,மெயின் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுகாளித்துவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அந்த உத்தரவை காளிமுத்து இதுவரை கடைபிடிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காளிமுத்துஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை இன்றைக்கு நீதிபதி ரவீந்திரன் ஒத்தி வைத்தார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் காளிமுத்து ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதந்திரம்,காளிமுத்து சென்னையில் இல்லை. எனவே அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. அடுத்த மாதம் அவர் ஆஜராவார்என்று தெரிவித்தார்.
அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரவீந்திரன், இன்று 2 சாட்சிகளை மட்டும் விசாரிக்க அனுமதித்தார். பின்னர்வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அந்த தினத்தில் விசாரணை ஆரம்பித்து தொடர்ந்து 3 நாட்களுக்குநடைபெறும் என்றும் அறிவித்தார்.