இன்று முதல் அக்னி நட்சத்திரம்: வறுத்தெடுக்கும் கத்திரி வெயில்
சென்னை:
இன்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்குகிறது. இதனால் அடுத்த 25 நாட்களுக்குவெயில் வறுத்தெடுக்கும்.
அதேசமயம் அவ்வப்போது மழையும் இருக்கலாம் என்று கூறி வானிலை ஆராய்ச்சி நிலையம் வயிற்றில் கொஞ்சம் ஆவின்பாலையும் வார்த்துள்ளது.
இந்த ஆண்டும் கத்திரி வெயில் மிகக் கொடுமையாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சத்துள்ளது. இன்று முதல்15 நாட்களுக்குத்தான் கத்திரி இருக்கும் என்றாலும் அதன் தாக்கம் மொத்தம் 25 நாட்களுக்கு நீட்டிக்கும்.
வெயில் அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது லேசான மழையும் இருக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம்ஆறுதலும் கூறியுள்ளது.
ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் கத்திரி சீசன் தொடங்குவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது.
சென்னையில் கத்திரி வெயிலின் கொடூரம் மிகக் கடுமையாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு கத்திரியின் போது கடும் மழைபெய்து வெயிலை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. இந் நிலையில், இந்த ஆண்டும் கத்திரி தொடங்குவதற்கு சில நாட்களுக்குமுன்பாகவே சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளதால் மக்களுக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த மழை தொடருமா அல்லது டபாய்த்து விடுமா என்ற சந்தேகத்தில் சென்னைவாசிகள் இருக்கிறார்கள்.