காவிரி: பெங்களூரில் அய்யர் கொடும்பாவி எரிப்பு
பெங்களூர்:
தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் மறுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பேசியதற்கு எதிர்ப்புதெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது. அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பெட்ரோலியத் துறைஅமைச்சர் மணிசங்கர் அய்யர், தமிழகத்துக்கு காவிரி நீர் விஷயத்தில் நீதி கிடைக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் தரம்சிங் பிறகு நிருபர்களிடம் பேசுகையில், காவிரி விஷயத்தில்கர்நாடகத்தின் நலனை விட்டுத் தரவே மாட்டோம் என்றார். அப்போது உடனிருந்த முன்னாள் பிரதமர் தேவ கெளடா, காவிரிதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யும் தைரியமான முடிவை இந்த அரசு எடுத்துள்ளது என்றார்.
இந் நிலையில் மணிசங்கர் அய்யரின் காவிரி பேச்சுக்கு கர்நாடகத்தில் ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியுள்ளது.அய்யரைக் கண்டித்து பெங்களூரில் நடந்த போராட்டத்தில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை நடத்திய காவிரி நீர் பாதுகாப்புக் குழு தலைவர் மாதே கெளடா, மணிசங்கர் அய்யர் தனது பதவியைராஜினாமா செய்ய வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காகஅவர் செய்யும் சதி இது என்றார்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், காவிரியிலுள்ள அணைகளில்தண்ணீரே இல்லாத போது எப்படி தண்ணீரை திறந்து விடமுடியும். நாங்கள் பட்டினியில் கிடக்கும் போது தமிழ்நாட்டுக்கு விருந்துபடைக்க முடியாது என்றார்.
பாஜக மூத்த தலைவரான எடியூரப்பா கூறுகையில், காவிரி நீர் குறித்து மணிசங்கர் அய்யர் பேசியது கண்டிக்கத்தக்கது. மத்தியஅமைச்சர் ஒருவர் தனது மாநிலமான தமிழகத்துக்கு பரிந்து பேசுவது ஒரு தலைப்போக்காகும் என்று தனக்குத் தெரிந்த நியாயம்பேசினார்.