இப்போ அரைப் புள்ளி, அடுத்து முழு புள்ளி: ப.சி
காஞ்சிபுரம்:
அதிமுக ஆட்சிக்கு இடைத்தேர்தலில் அரைப் புள்ளியும், பொதுத் தேர்தலில் முற்றுப் புள்ளியும் வைக்க வேண்டும் என்றுகாஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பேசுகையில், இடைத்தேர்தல் மட்டும் ஒழுங்காக நடந்தால் திமுக தனதுவெற்றியை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைகளை அடுத்த ஒரு ஆண்டில் தீர்த்து வைக்கப் போவதாக ஜெயலலிதாகூறுவது நம்பத் தகுந்தது அல்ல.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவது தான் முதல் உரிமை. அதற்கு ஆளும் கட்சி பதில் தரலாம். ஆனால் இங்கு நடப்பதோஎதிர்க்கட்சியினர் பேசும்போது குறுக்கிடுவது, மீறி பேசினால் குண்டுக் கட்டாக தூக்கி வெளியே போடுவது இது தான் நடக்கிறது.
காவல் துறையினருக்கு ஒன்றை நான் கூறிக் கொள்கிறேன். அத்துமீறலுக்கு துணை போகாதீர்கள். சட்டத்துக்கும், மக்களுக்கும்,நாட்டுக்கும் மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒருவருக்கு விசுவாசமாக செயல்படக்கூடாது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தல் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.அதிமுக ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் அரைப்புள்ளியும், அடுத்த பொதுத்தேர்தலில் முற்றுப் புள்ளியும் வைக்கவேண்டும் என்றார்.