கும்மிடியில் போலி வாக்காளர்கள் இல்லை: குப்தா
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தொகுதியில் போலி வாக்காளர்கள் யாரும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாகூறியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் நரேஷ் குப்தா, மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கச்சாமி, தேர்தல் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 20,000 போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புகார் தவறானது. இது சாத்தியமே இல்லாதது. வாக்காளர் பட்டியல் தீவிரப் பரிசீலனைக்குப்பிறகே இறுதி செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 196 வாக்குச்சாவடிகளிலும் வீடியோ எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின்ஏஜென்டுகள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தொகுதியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கியுள்ளனர். அனைவரும் தேர்தல் விதிமுறைப்படி, வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரத்திற்கு முன்பாவே வெளியேற்றப்படுவார்கள்.
ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அடையாள மை, அழிக்கவே முடியாதஅளவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே மையை அழித்து விட்டு கள்ள ஓட்டுப் போட முடியாது என்றார் நரேஷ் குப்தா.