சென்னை மாநகராட்சியில் பாட்டில் வீச்சு: திமுக பெண் கவுன்சிலர்கள் காயம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் அடிதடி மோதல் நடந்தது. அதிமுகவினர்பாட்டில் வீச்சு நடத்தியதில் இரு திமுக பெண் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது சமீபத்தில் 110 மற்றும் 131 ஆகியவார்டுகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு அதிமுக உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களைக்கூறியதால், திமுகவினர் கடும் கோபமடைந்தனர். பதிலுக்கு ஜெயலலிதா குறித்து அவர்கள் பேச இரு தரப்பினருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது.
உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறினார். ஆனால் யாரும் கேட்கவில்லை.திடீரென கைகலப்பு ஏற்பட்டது. பலருக்கு அடியும் விழுந்தது.
அப்போது பேப்பர்கள் கிழித்து எறியப்பட்டன. பேப்பர் வெயிட்டுகளும் பறந்தன. மைக்குகள் பறந்தன.
அப்போது திமுகவினர் மீது அதிமுக கவுன்சிலர்கள் பாட்டில்களை வீசினர். இதில் திமுக பெண் உறுப்பினர்களான சாந்தி பாய்மற்றும் நிர்மலா தேவி ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
பின்னர் திமுக உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேற்றுமாறு துணை மேயர் கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.