ஜெயலட்சுமிக்கு போலீஸ் பாதுகாப்பு ரத்தாகிறது
மதுரை:
போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்குமாறு கோரிய ஜெயலட்சுமியின் கோரிக்கையை மதுரை நீதிமன்றம் நிராகத்து விட்டது.இதையடுத்து அவரது போலீஸ் பாதுகாப்பு வாபசாகிறது.
போலீஸார் மீது பல்வேறு புகார்களைக் கூறிய ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டதின் பேரில் இதுவரை மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வந்தனர்.
தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டதால், பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி மதுரைமுதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மனு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை இறுதியாக நடந்தது. அப்போது ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பு கொடுத்தவகையில் இதுவரை அரசு ரூ. 14 லட்சம் செலவிட்டுள்ளது.
போலீஸ் சட்டப்படி, தனியாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் ஒரு இன்ஸ்பெக்டருக்கு ரூ. 500மும், சப்இன்ஸ்பெக்டருக்கு ரூ. 300மும், ஏட்டுக்கு ரூ. 250மும், காவலர்களுக்கு தலா ரூ. 200மும் வழங்கப்படவேண்டும்.
ஜெயலட்சுமி விவகாரத்தில் இது தவறான நடைமுறையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அவருக்கு பாதுகாப்பாக அளித்தவகையில் பெரும் செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை முக்கிய சாட்சியாகக் கூறப்பட்ட, ஜெயலட்சுமி தற்போது குற்றவாளியாகவும் உள்ளார். எனவே, இதைத்தொடர்ந்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று போலீஸ் தரப்பில் வாதாடப்பட்டது.
இரு ததரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அய்யாச்சாமி, ஜெயலட்சுமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த கோரிக்கை தொடர்பாக 30 நாட்களுக்குள் ஜெயலட்சுமி உயர் நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யலாம் என்றும் கூறியநீதிபதி, அதுவரை போலீஸ் பாதுகாப்பை தொடருமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
ஜெயலட்சுமியின் பாதுகாப்புக்கு ரூ. 14 லட்சம் !