வங்கி பெட்டகத்தில் கத்தை கத்தையாய் கள்ள நோட்டு: ஊழியர் கைது
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 6 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுக்களைப் பதுக்கி வைத்திருந்த வங்கிஊழியர் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம்- சேலம் மெயின் ரோட்டில் ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. இங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தைஅதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் சில ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்களாக இருந்தது தெரியவந்தது.
ரூ. 5 லட்சத்துக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுக்களும், ரூ. 1 லட்சத்துக்கு நூறு ரூபாய் கள்ள நோட்டுக்களும் வங்கி பெட்டகத்தில் இருந்தன.இந்த அளவுக்கு கள்ள நோட்டுக்கள், வங்கிப் பெட்டகத்திற்குள் எப்படி வந்தது என்பது அதிகாரிகளிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ராசிபுரம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் வங்கியில் கடந்த 15ஆண்டுகளாக ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ராஜு என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆத்தூரைச் சேர்ந்த ஒருவர்தான் தன்னிடம் இந்த கள்ள நோட்டுக்களைத் தந்ததாகவும்,நல்ல நோட்டுக்களுக்கு இடை இடையே இந்த கள்ள நோட்டுக்களை செருகி வந்ததாகவும் ராஜு கூறினார்.
இதையடுத்து அந்த நபரைப் பிடிக்க போலீஸார் ஆத்தூர் விரைந்துள்ளனர்.
வங்கி பெட்டகத்தில் வங்கி ஊழியரே லட்சக்கணக்கில் கள்ள நோட்டுக்களை வைத்திருந்தது வங்கிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications