கோவில்பட்டி அருகே நில நடுக்கம்: மக்கள் பீதி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
கடலுக்குள் நில நடுக்கம் உருவான இந்தோனேஷியாவில் அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் கடற்கரைபகுதிகளிலும், கடல் சீற்றமும், கடல் கொந்தளிப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.
இந் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி என்ற கிராமத்தில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம்1:15 மணியளவில் இந்த நில அதிர்ச்சி ஏற்பட்டது. சில நிமிடங்களே இந்த நில அதிர்வு காணப்பட்டது.
ஈராச்சி கோட்டை தெரு, நாடார் தெரு பகுதிகளில் இருந்தவர்கள் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததும், தங்கள் வீடுகளை விட்டுஅலறியடித்து வெளியே ஓடி வந்தனர். வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளும் துள்ளிக்குதித்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது.
இந்த நில நடுக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் நீண்ட நேரம் வீட்டுக்குள் செல்லாமல் அச்சத்துடன் வெளியே நின்றுகொண்டிருந்தனர்.
நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் திடீரென பயங்கர சூறாவளி காற்றும் வீசியது. அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் இக்கிராமங்களில்மக்களிடேயே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.