பாஜகவை வலுப்படுத்த 10 தலைவர்கள் குழு
சென்னை:
சட்டசபை பொதுத் தேர்தலுக்குள் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக 10 தலைவர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் குமாரவேலு தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுக்களில் இல.கணேசன், திருநாவுக்கரசர், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கே.என்.லட்சுமணன், பொன்.ராதாகிருஷ்ணன், ஜி. குமாரவேலு, தமிழிசைசெளந்தரராஜன், லலிதா குமாரமங்கலம், மோகன் ராஜுலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு தலைவருக்கும் 5 மாவட்டங்கள் ஒதுக்கப்படும். அந்த மாவட்டங்களுக்கு இவர்கள் சென்று பாஜகவின் நிலைப்பாட்டை தொண்டர்களுக்கு விளக்கி,கட்சியின் நிலை குறித்து ஆய்வு நடத்தி அதற்கேற்ப திட்டங்களை வகுப்பார்கள்.
கோடை விடுமுறைக்காக பலர் வெளியூர்களுக்கு சென்றிருந்தபோது வாக்காளர் சரி பார்ப்பு பணி நடந்துள்ளது. இதனால் ஏராளமானோரின் பெயர்கள் விடுபட்டுப்போயுள்ளன. எனவே வாக்காளர் பெயர் சேர்ப்புப் பணியை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்குக்கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் குமாரவேலு.