வாக்காளர் பட்டியல்: மத்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு
சென்னை:
வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து ஆய்வு நடத்துவதற்காக நேற்று சென்னை வந்த மத்திய தேர்தல் கமிஷனை சேர்ந்த 2அதிகாரிகள் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் 165 சட்டசபைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பெயர் சேர்ப்புமற்றும் ஆட்சேபங்கள் தெரிவிக்க கடந்த மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
போலி வாக்காளர்களை சேர்ப்பதற்காக ஆளும் கட்சியினர் மொத்தம், மொத்தமாக விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர்.அவற்றை அப்படியே பட்டியலில் சேர்க்க அதிகாரிகள் துணை போகின்றனர் என்று திமுக குற்றம் சாட்டியது.
போலி வாக்காளர்களை சேர்த்த அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதிமுகவின் செயற்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் இந்தப் புகாரால் அதிர்ச்சியடைந்த மத்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான குழப்பம்குறித்து விசாரிக்க 2 அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப முடிவு செய்தது.
தேர்தல் ஆணைய செயலர் தபஸ் குமார், சட்ட ஆலோசகர் எஸ்.கே.மென்டிரட்டா ஆகியோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.நேற்று இரவு சென்னை வந்த இவர்கள், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சியினரிடம் கருத்துக்களைகேட்டனர்.
இதற்கிடையே தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், கடந்தபிப்ரவரி 1ம் தேதி தொடங்கியது. மொத்தம் 165 சட்டசபைத் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 10ம் தேதிவெளியிடப்பட்டது.
அதன் பின், விடுபட்ட பெயர் சேர்ப்பு மற்றும் ஆட்சேபங்கள் தெரிவிக்க கடந்த மாதம் 30ம் தேதி வரை அவகாசம்அளிக்கப்பட்டது. தனி நபர் மனுக்களைத் தவிர முக்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து கடைசி நாளில் மொத்தமாகவிண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால், போலி பெயர்களை சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
கடும் நடவடிக்கை:
வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தல் ஆணையம்அதை கண்காணிக்கிறது என்பதையும் ஆணையம் தெளிவுபடுத்துகிறது.
மாவட்டத் தலைநகர் மற்றும் தாலுகா தலைநகர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுப்பப்பட்டு, நேரடியாக ஆய்வுசெய்து தேவையான அறிவுறுத்தல்களை அங்கேயே அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தில்இருந்து சட்ட ஆலோசகர் மென்டிரெட்டா, செயலர் தபஸ் குமார் ஆகியார் கொண்ட குழு தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இக்குழு அனைத்து கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்கும். பின், மாவட்டத் தலைநகர்களுக்கு நேரடியாக சென்று மொத்தமாகவிண்ணப்பங்கள் வந்துள்ளதை ஆய்வு செய்யும். எந்த குறைபாடும் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல்ஆணையம் உறுதி கொண்டுள்ளது.
இதற்கு இடையூறாக, போலி பெயர்களை பட்டியலில் சேர்க்க யார் முயற்சித்திருந்தாலும், வேண்டுமென்றே அதிகாரிகள் அதற்குதுணை போயிருந்தாலும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.