2000 பள்ளிகளுக்கு 1 மாதம் அவகாசம்
சென்னை:
நர்சரி பள்ளிகளை மூட மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. மேலும் 2000 பள்ளிகளுக்கு ஒரு மாதம் அவகாசம்அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தீ தடுப்பு நடவடிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாத நர்சரி பள்ளிகளை மூட தமிழகஅரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2000 நர்சரி பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
இந் நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளி நிர்வாகத்தினர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
அதில், அனுமதி பெறாத பள்ளிகளை மூடவேண்டும் என்ற விருதுநகர் மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலதடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இப்ராகிம் கலிமுல்லா மாவட்ட கல்விஅதிகாரியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதுபோல் மதுரையை சேர்ந்த 39 பள்ளிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில், நீதிபதி சொக்கலிங்கம் அரசு உத்தரவுக்கு இடைக்காலதடை விதித்தார். இதன் மூலம் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 40 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட இடைக்கால அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாமல் உள்ள 2000 நர்சரி பள்ளிகளுக்கு 1 மாதம் அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கீகாரம் பெறாத பள்ளிகள் அரசு விதிகளின் படி விண்ணப்பித்தால் 1 மாத காலத்திற்குள்ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.