வாக்காளர் பட்டியல்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியலில் போலி பெயர்களை சேர்க்க விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தால், அவற்றை அளித்த அரசியல் கட்சியினர் யாராக இருந்தாலும் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடிகள் காணப்பட்டது. இதனால் அவற்றை களைய பட்டியலில் சிறப்புத்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
10ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை விடுபட்ட பெயர்கள் சேர்ப்பு மற்றும் ஆட்சேப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் கடைசி நாளன்று மட்டும் 12 லட்சத்து 73ஆயிரம் விண்ணப்பங்கள், பெயர் சேர்ப்புக்காக வந்ததால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.
ஆளும் கட்சியினர் போலி பெயர்களை மொத்தமாக சேர்த்துள்ளதாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனிடம் முறையிட்டது.
இதைத் தொடர்ந்து, டில்லியில் இருந்து தேர்தல் கமிஷனின் சட்ட ஆலோசகர் எஸ்.கே.மென்டிரட்டா, செயலாளர் தபஸ் குமார் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.சென்னையில் தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில் இவர்கள் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்திகருத்துக்களை கேட்டனர்.
இதன் பிறகு மென்டிரட்டா கூறுகையில், வாக்காளர் பட்டியலில் போலிப் பெயர்களை சேர்த்துள்ளதாக அரசியல் கட்சியினர் புகார் கூறினர். விண்ணப்பங்கள்அனைத்துமே சரி பார்த்த பின் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும்,
போலிப் பெயர்கள் உள்ளதா என்பதை அரசியல் கட்சியினரும் சரி பார்க்க வசதியாக அவர்களுக்கும் அந்த விண்ணப்பங்களின் விவரத்தைக் கொண்ட வரைவு பட்டியல்வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறோம்.
வரும் 8ம் தேதி அரசியல் கட்சியினருக்கு வரைவுப் பட்டியல் தரப்படும். அவர்கள் ஒரு வாரத்துக்குள் அவற்றை சரிபார்த்து விட்டு, விடுபட்ட பெயர்கள், போலிபெயர்கள் குறித்த விவரங்களை 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அவர்களின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். எனவே அரசியல் கட்சிகள் பயப்படத் தேவையில்லை.
விண்ணப்பங்களை மொத்தமாக அளிப்பதற்கு தேர்தல் கமிஷன் அனுமதித்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகளோ, குடியிருப்புச் சங்கங்களோ இது போன்றுமொத்தமாக விண்ணப்பங்களை அளிக்கும் போது, அவற்றில் தவறான விவரம் அளித்திருந்தால் அதற்குரிய நடவடிக்கையை ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழிகொடுத்திருக்க வேண்டும்.
எனவே போலிப் பெயர்களை சேர்த்தவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 31ன் கீழ் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில்இது போன்று போலிப் பெயர்களை பட்டியலில் சேர்த்தவர்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், போலி பெயர்களைச் சேர்க்க அதிகாரிகள் துணை போயிருந்தால் அவர்கள் மீதும் சஸ்பென்ஷன் உட்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.