தேர்தல் அதிகாரியிடம் கவர்னர் விசாரணை
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கவர்னர் பர்னாலா விளக்கம் கேட்டார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. இதில், பெயர் சேர்ப்பு மற்றும் ஆட்சேப விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாளில் மட்டும் 12லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து மத்திய தேர்தல் கமிஷனில் இருந்து நேற்று இரு நபர் குழு வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கவர்னர் பர்னாலாவிடமும் திமுக தலைவர் கருணாநிதி ஒரு புகார் மனுவை அளித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை அழைத்து கவர்னர் பர்னாலா விளக்கம் கேட்டார். அப்போது வாக்காளர் பட்டியல்திருத்தம் தொடர்பான குழப்பங்கள் குறித்தும் தேர்தல் கமிஷன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கவர்னரிடம் அவர் விளக்கினார்.
இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றது.