ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..: ஜெ வலை
சென்னை:
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிஇ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சமீபகாலமாக நகர்ப் பகுதிகளைவிட ஊரகப் பகுதி மாணவ, மாணவர்களே பிளஸ் டூவில் சராசரியாக அதிக மதிப்பெண்கள் எடுத்து வருகின்றனர். ஆனால், நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராக நகர்ப் பகுதிகளில் தான் அதிகமான பயிற்சி மையங்களும் வசதிகளும் உள்ளன.
இந்த விஷயத்தைத் தான் கையில் எடுத்தார் பாட்டாளி மக்கள் நிறுவனரான டாக்டர் ராமதாஸ். நுழைவுத் தேர்வு என்பதே ஏழை, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலைவைக்கும் செயல் என்ற தொடர் பிரச்சாரத்தில் இறங்கியதோடு, மாவட்டந்தோறும் போராட்டத்தையும் நடத்தி வந்தார்.
அவரது கருத்துக்கு கிராமப் பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. குறிப்பாக, படாதபாடுபட்டு தங்கள் குழந்தைகளை பிளஸ் டூ வரை படிக்க வைத்துவிட்டு,தொழில் படிப்புக்கு அவர்களை அனுப்பவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் ஏழை மக்களிடையே பாமக பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந் நிலையில் தான் இந்த நுழைவுத் தேர்வை தானே முன் வந்து ரத்து செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஊரகப் பகுதி வாக்குகளையே பெரும்பாலும் சார்ந்துள்ளஅதிமுகவுக்கு இது நிச்சயம் பெரும் பலனைத் தரும். விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது அதிமுகவுக்குசாதகமாகவே அமையும் என்று கருதப்படுகிறது.
அதே போல பிளஸ் டூவில் சிரமப்பட்டு படித்து, தேர்வெழுதிவிட்டு அடுத்த நாளில் இருந்தே நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சிரம நிலையில் இருந்துமாணவர்களுக்கும் (நகர்ப்புற, கிராமப்புற மாணவர்கள் அனைவருக்கும்), அவர்களைத் தயார் செய்ய வேண்டிய சிரம நிலையில் இருந்து பெற்றோருக்கும் விடுதலைகிடைத்துள்ளது.
மேலும் நுழைவுத் தேர்வுகளை வைத்து நடந்த சட்டப் போராட்டங்கள், நீதிமன்ற இழுத்தடிப்புகள் ஆகியவற்றால் நுழைவுத் தேர்வு என்றாலே தெறித்து ஓடும் நிலைதான் தமிழகத்தில் நிலவியது. அந்தக் குழப்பத்தில் இருந்து மாணவர்களையும் பெற்றோர்களையும் விடுவித்துள்ளார் ஜெயலலிதா.
ஒரு பக்கம், தேர்வு ரத்து மூலம் ராமதாஸ் கையில் எடுத்த ஆயுதத்தை ஜெயலலிதா அழகாக தட்டிப் பறித்துவிட்டாலும், இது அதிமுக-பாமக கூட்டணிக்கும் கூடஅடிபோடும் கிராண்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.
ராமதாஸ் வைத்த கோரிக்கையை ஏற்றதன் மூலம் அவரை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என ஜெயலலிதா நினைப்பதாகத் தெரிகிறது.
விரைவில் ராமதாஸ் முன் வைக்கும் பிற கோரிக்கைகளும் படிப்படியாக ஏற்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்தப்பட இருந்தது.
காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்தியகம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் நடக்க இருந்த போராட்டம் வாபசாகும் என்று தெரிகிறது.
தேர்வு ரத்து மூலம் ஒரு பக்கம் மாணவர்கள், பெற்றோரின் ஆதரவுக்கு வலை வீசியுள்ளதோடு, கூட்டணி கணக்கு போட்டு அரசியல் வலையையும் சேர்த்தேவீசியிருக்கிறார் ஜெயலலிதா.