ஜின்னா வாழ்க.. அண்ணா வாழ்க..: அத்வானி குறித்து கருணாநிதி கிண்டல்
சென்னை:
அத்வானி திடீரென மதசார்பற்றவர் மாதிரி நடிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதியிடம் பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி விலகியது குறித்து கருத்து கேட்டபோது,
அது பாஜகவின் உட்கட்சி விவகாரம். அதில் நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
பாகிஸ்தானில் பேசிய அத்வானி, பாபர் மசூதி இடிப்பு தினம் என் வாழ்வில் சோகமான நாள் என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு பதிலளித்த கருணாநிதி,
மதவாத கருத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டு, மதசார்பற்றவர்களைப் போல நடித்துக் கொண்டு, ஜின்னா வாழ்க, அண்ணா வாழ்க என்று கூறிக்கொண்டிருப்பதை எவ்வளவு காலத்துக்கு மக்கள் நம்பி ஏமாறப் போகிறார்கள் என்பது தான் நம் முன் நிற்கிற கேள்வி.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசை வலியுறுத்த தூதுக் குழுவை அனுப்புவீர்களா என்று கேட்டபோது, தேவைப்பட்டால் நானே அம் மாநிலமுதல்வரோடு பேசுவேன். காவிரியில் தண்ணீர் கேட்டு இங்கிருந்து (ஜெயலலிதாவிடம் இருந்து) கடிதம் போனதாகவும், அப்படி கடிதமே வரவில்லை என்று அம் மாநிலமுதல்வர் மறுத்ததாகவும் செய்தி பார்த்தேன் என்றார்.
உங்கள் மீது இன்னொரு அவதூறு வழக்கு போடப் போகிறாராமே முதல்வர் என்று கேட்டதற்கு, எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க வேண்டியது தான் என்றார்கருணாநிதி.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யும்போது உங்கள் கட்சி சார்பில் மாற்றம் ஏதாவது செய்யப்படுமா என்று கேட்டதற்கு, அது மாதிரி ஏதும் தகவலே இல்லை.ஏதாவது சிபாரிசு செய்திருக்கிறோமா? மாற்றம் செய்திருக்கிறோமா என்பதை சில வார பத்திரிக்கைகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்றார்.