13 லட்சம் போலி வாக்காளர்கள்: நீக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியலில் அதிமுகவினரால் போலியாக சேர்க்கப்பட்ட 13 லட்சம் விண்ணப்பங்களையும் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு திமுக கூட்டணிகோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் போலி வாக்காளர்களே சேர்க்கும் முயற்சியில் அதிமுகவினர் இறங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.
இப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கவும், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவும் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலைசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில், அதிமுகவினர் சேர்த்த 13 லட்சம் வாக்காளர்களும் போலி எனத் தெரியவந்துள்ளது. எனவே இந்த 13 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும்வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு கருணாநிதி கூறுகையில், எங்களது கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் நாங்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவு செய்வோம்.
தொழிற் படிப்புகளில் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ததை நான் வரவேற்கிறேன். எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் தான் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி வருகிற 16ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடைபெறும்என்றார்.
டெல்லி விரைந்தார் நரேஷ் குப்தா:
இதற்கிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் நடைபெற்ற தேர்தல்கமிஷன் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இக் கூட்டத்தில் அவர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து மத்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் விளக்கினார்.
மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி தமிழகம் வந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் தபஸ் குமார் மற்றும் மென்ரிட்டா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது குறித்து விளக்கினார்கள்.
இக்கூட்டம் முடிந்ததும் விசாரணை அறிக்கை தலைமை தேர்தல் கமிஷனரிடம் அளிக்கப்படுகிறது. இதன் பிறகு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்.