சுனாமி பகுதிகளில் கலால் வரி விலக்கு: ஜெ. கோரிக்கை
சென்னை:
சுனாமி பாதித்த பகுதிகளிலுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு 10 ஆண்டுகளுக்கு கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனபிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம்,திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பூகம்பத்தால் பேரழிவை சந்தித்த குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கலால்வரி விலக்கு அளிக்கப்பட்டது.
இதே போல இமாச்சல பிரதேசம், உத்ராஞ்சல் ஆகிய மாநிலங்களிலும் தொழில் வளர்ச்சிக்காக இத்தகைய வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
கடந்த மாதம் 31ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக உடனடியாக அறிவிப்புவெளியிடும் படி வற்புறுத்தியுள்ளேன்.
மேலும் சுனாமி பாதித்த பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான சிமெண்ட், இரும்பு பைப்புகள் போன்ற பொருட்களுக்கும் முழு கலால் வரிவிலக்கு அளிக்கவேண்டும். உள் கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகளை இப்பகுதிகளில் உருவாக்க இது உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.