கம்ப்யூட்டர் நிறுவன தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி
சென்னை:
சென்னையில் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவன அதிபரிடம் சினிமா பாணியில் ரூ. 30 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவான 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்தவர் அக்தர் உசேன். இவர் அண்ணாசாலை ரிச்சி தெருவில் சேலஞ்சர் என்ற கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2மாதங்களுக்கு முன் வட மாநிலத்தை சேர்ந்த தடக் என்பவர் சந்தித்துள்ளார்.
அப்போது அவருடன் அழைத்து வந்த குப்தா என்பவரை தமது அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை செயல் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
மீனம்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில் தான் தங்கியிருப்பதாகவும், அங்கு வைத்து வியாபாரம் குறித்து பேசலாம் என்றும் அக்தரிடம் குப்தா கூறியுள்ளார். இதைநம்பிய அக்தரும் ஹோட்டலுக்கு சென்று பேசியுள்ளார்.
30 லட்சம் ரூபாய் சரக்குகளுக்கு ஒப்பந்தம் பேசிய பிறகு, பணத்தை 1,000 ரூபாய் நோட்டுகளாக எடுத்து வரும்படி அக்தரிடம் கூறியுள்ளார். அதே போல பணத்தைஅக்தர் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் பணத்தை மறுநாள் கொண்டு வருமாறு குப்தா கூறியுள்ளார்.
மறுநாள் அக்தரிடமிருந்து பணத்தை வாங்கி எண்ணி விட்டு ஒரு பையில் வைத்து அதை தனது சூட்கேஸில் வைத்து குப்தா மூடினாராம். அப்போது குப்தாவுக்கு ஒருபோன் வந்துள்ளது.
இதையடுத்து தனியறையில் போய் போனில் பேசிவிட்டு வந்த அந்த நபர், அக்தரிடமே பணப் பையை (வெற்றுத் தாள்களை நிரப்பி) திருப்பித் தந்துள்ளார்.
பின்னர், சரக்கு உங்கள் அலுவலகத்திற்கே வரும். பணத்தை நீங்கள் அப்போது கொடுத்தால் போதும். உங்கள் பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பிவைத்திருக்கிறார்.
பையுடன் திரும்பிய அக்தர் சரக்கு எதுவும் வராததால் குப்தா தங்கியிருந்த ஹோட்டலைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அறையை காலி செய்து விட்டார்என்ற தகவல் கிடைக்கவே சந்தேகம் அடைந்து தன்னுடைய பையை திறந்து பார்த்திருக்கிறார்.
அதில் பணத்துக்குப் பதிலாக வெறும் தாள்கள் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்தர், உடனடியாக போலீஸில் புகார் செய்தார். பரங்கிமலை போலீஸார்வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications