தர்மபுரி பஸ் எரிப்பு: வழக்கு 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு வருகிற 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தர்மபுரியில் கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவிகள் பஸ்சுடன் சேர்த்து அதிமுகவினரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை 40 நாள்இடைவெளிக்குப் பின் சேலம் நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மீண்டும் தொடங்கியது.
மறுநாள் இறந்த மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது தான் ஆசையாக தனது மகளுக்கு வாங்கிக் கொடுத்த சுடிதாரைநீதிமன்றத்தில் அடையாளம் காட்டியபோது கதறி அழுதார்.
தயவு செய்து சுடிதாரை என்னிடம் காட்டாதீர்கள். என்னால் பார்க்க முடியாது என்று கூறி அவர் கதறி அழுதார்.
இந் நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்று எரித்து கொல்லப்பட்ட மாணவி ஹேம லதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்ராஜ்குமார் சாட்சியம் அளித்தார். தலை முதல் கால் வரை எரிந்ததால் ஹேம லதாவிற்கு மரணம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
ஈரோட்டை சேர்ந்த டாக்டர் விஜயகுமார் சாட்சியம் அளிக்கையில், கடந்த 3.2.2000 அன்று திலகம் என்ற மாணவி தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் காயமடைந்ததாககூறி என்னிடம் வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்தேன். முழங்கையிலும், காலிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. எனவே அவரை உள் நோயாளியாக அனுமதித்துசிகிச்சை அளித்தேன் என்றார்.
அவருக்கு ஏற்பட்ட தீக்காயங்கள் அனைத்தும் பஸ் தீப்பற்றி எரிந்த போது ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
பின்னர் கோவையை சேர்ந்த டாக்டர் ரஜினி குமாரி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், கடந்த 3.2.2000 அன்று சித்ரா என்பவரை சக மாணவிகள் அழைத்துவந்தனர். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். அவரது தொடையில் காயம் இருந்தது. அதற்கு நான் சிகிச்சை அளித்தேன்.
பஸ்சின் ஜன்னல் வழியே அவரை கீழே இறக்கும் போது தகரம் அல்லது கம்பி பட்டு தொடையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
பின்னர் 3 சாட்சிகளிடமும் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் கேள்விகள் கேட்டார். தொடர்ந்து எதிர்தரப்பு வழக்கறிஞர் பார்த்தசாரதி 3 பேரிடமும் குறுக்கு விசாரணைசெய்தார்.
இதன் பின்னர் வழக்கு விசாரணை வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, 22 மற்றும் 23 ம் தேதிகளிலும் விசாரணை நடைபெறும் என நீதிபதிகிருஷ்ண ராஜா அறிவித்தார்.