இந்தியாவில் இன்டெல் நிறுவன சிப் தயாரிப்பு மையம்: அமெரிக்காவில் தயாநிதி தகவல்
சிலிக்கன் வேலி:
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் இந்தியாவில் அதி நவீன சோதனை மற்றும் சிப் தயாரிப்பு மையத்தை அமைக்கவுள்ளதாக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
5 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மாறன், சிலிக்கன் வேலியில் இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரைக் பேரட்டை சந்தித்துப் பேசினார்.
மேலும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் வழங்கிய கடிதத்தையும் பேரட்டிடம் தந்தார்.
இந்தியாவில் தொழில் தொடங்க அனைத்து வசதிகளையும் தானே முன்னின்று செய்து தருவதாக தயாநிதி வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய மாறன்,
400 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்த சோதனை மையத்தை இந்தியாவில் அமைக்க இன்டெல் முடிவு முன் வந்துள்ளது. 8 மாதங்களுக்கு முன் இந்தியா வந்த கிரைக்பேரட் என்னைச் சந்தித்தார். அதன் பின்னர் அவருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன்.
சாப்ட்வேர் மற்றும் தொலைத் தொடர்புத்துறைக்கு உதவும் சிப் உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவுக்குக் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறோம்.
மேலும் சிஸ்கோ, அப்லைட்டு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளோம். அவர்களும் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கமுன் வந்துள்ளனர்.
இந்தியாவில் சிறந்த தொழில் நுட்ப நிபுணர்களும், திறமையான சாப்ட்வேர் நிபுணர்களும் உள்ளனர். மேலும் தொழில் தொடங்க இன்று மிகப் பாதுகாப்பான நாடுகளில்ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
தொலைத் தொடர்புத்துறையின் அடிப்படைக் கட்டமைப்பை மிக வேகமாக விரிவாக்கி வருகிறோம்.
சிலிக்கன் வேலியில் சாதனை படைத்த பல இந்தியர்கள் இருக்கிறார்கள். இதனால் எனது வேலை ஈசியாகிவிட்டது. அந்த இந்தியர்கள் செய்த மகத்தான சாதனைகளால்தான் என்னால் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிபர்களைச் சந்தித்து எளிதாக வேலையை முடிக்க முடிந்தது என்றார்.
இந்தியாவில் சென்னை, பெங்களூர் அல்லது நாய்டாவில் தனது மையத்தை அமைக்க இன்டெல் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெங்களூரில் ஏற்கனவே இந் நிறுவனத்தின் சாப்ட்வேர் தயாரிப்பு மையம் உள்ளது. ஆனால், சிப்களை அமெரிக்கா, இஸ்ரேல், அயர்லாந்த் ஆகிய நாடுகளில் தான்தயாரித்து வருகிறது. இந்தியாவில் இந்த மையம் அமைந்தால் ஆசியாவிலேயே இன்டெலின் முதல் சிப் தயாரிப்பு மையமாக இது அமையும்.
இந்தியாவுக்கு வரும் சிப்களில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்தத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமானஇன்டெலை இந்தியாவில் சிப் தயாரிப்பு மையம் அமைக்க வைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு படியாகவே தயாநிதி மாறன் இன்டெல் தலைவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஏற்கனவே நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தையும், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவை இந்தியாவுக்குக் கொண்டு வந்ததிலும்மாறனின் பங்கு மகத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications