சந்திரிகா அரசுக்கு ஜேவிபி 5 நாள் கெடு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் வரும் 16ம் தேதிக்குள் இது குறித்த முடிவை அறிவிக்காவிட்டால் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்குவோம் என்றும் சந்திரிகா அரசுக்கு ஜனதா விமுக்தி பிரமுனா நிபந்தனையும் கெடுவும் விதித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண உதவிகளை வழங்க முதலில் மறுத்த இலங்கை அதிபர் சந்திரிகா பின்னர் சர்வதேச நெருக்குதல் காரணமாவும், புலிகளின் மிரட்டல் காரணமாகவும் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்தார். சந்திரிகா அரசுக்கு ஆதரவளித்து வரும் முக்கிய கட்சியான ஜனதா விமுக்தி பிரமுனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் தனது முடிவில் இருந்து அதிபர் சந்திரிகா பின்வாங்கவில்லை. இதனால் கடுப்படைந்த ஜனதா விமுக்தி பிரமுனா கட்சி இப்போது சந்திரிகா அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளது. ஞ இது தொடர்பாக இக்கட்சியின் தலைவர் சோமவன்சா அமரசிங்கே கூறுகையில், எங்களது எச்சரிக்கையையும் மீறி அதிபர் சந்திரிகா விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளார். வருகிற 16ம் தேதிக்குள் அவர் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சந்திரிகா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம். விடுதைலப் புலிகளுடன் இணைந்து அவர் செயல்படுவதை நாங்கள் தடுப்போம். அதிபர் சந்திரிகாவின் இந்த செயல் தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக தேவையான உதவிகளை உள்ளூர் நிர்வாகமே செய்து வருகிறது நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் அது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த பலனையும் அளிக்காது என்றார்.
கொழும்பில் நட்வர் சிங்: இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் நேற்று இலங்கை சென்றார். 6வது இந்திய-இலங்கை கூட்டுக்குழு தலைவராக இருக்கும் இவர், இலங்கை வெளியுறவு அமைச்சர் கதிர்காமரை சந்தித்து விமானப் போக்குவரத்து, கல்வி, சுற்றுலா உட்பட இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சேது சமுத்திர திட்டம் குறித்து இலங்கை அரசுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு நட்வர் சிங்விளக்கமளிப்பார்.
இதற்கிடையே நட்வர் சிங் கொழும்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இலங்கையில் அமைதி ஏற்பட இந்தியா அனைத்துவித உதவிகளையும் செய்யும். இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.
விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து சுனாமி நிவாரண உதவி செய்ய அதிபர் சந்திரிகா திட்டமிட்டுள்ளார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து நிவாரண உதவி செய்யவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை செல்கிறார். வருகிற 9ம் தேதி கொழும்பு புறப்பட்டு செல்லும் அவர், இருநாடுகளுக்கு இடையேயான வியாபாரம், முதலீடு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் கல்வி தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் நட்வர் சிங் சந்தித்து பேசுகிறார்.