ஆதியிடம் கை நீட்டிய போலீஸ் அதிகாரிகள் நீக்கம்
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவனிடம் லஞ்சம் வாங்கிய 2 காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாயக்காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆதிகேசவனின் மோசடிகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதில் பல புதுப் புதுத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஆதிகேசவனிடம் நடத்திய விசாரணை, சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்து குற்றப் பத்திரிக்கைதயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.
இந் நிலையில், ஆதி கேசவன் மீதான பல்வேறு புகார்களை கிடப்பில் போட்டும், அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, புகார்கொடுக்க வருபவர்களையே மிரட்டியதாக மகாகவி பாரதி நகர் உதவி ஆணையர் காசிப் கான், இன்ஸ்பெக்டர் பீர் முகம்மதுஆகியோர் மீது புகார் கூறப்பட்டு வந்தது.
ஆனால் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந் நிலையில் இருவரும் தற்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக செம்பியம் உதவிஆணையர் சேகர், மகாகவி பாரதி நகர் பகுதியை கூடுதலாக கவனிப்பார். இன்ஸ்பெக்டராக ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆதிகேசவனிடம் ரூ. 1 கோடி பணத்தைக் கொடுத்து ஏமாந்தார்.இப்பணத்தைக் கேட்டு அவர் பலமுறை ஆதிகேசவனை அணுகியும் பணம் கிடைக்கவில்லை.
இந் நிலையில் தொடர்ந்து அவர் பணம் கேட்டு வந்ததால், கோபமடைந்த ஆதிகேசவன், தனது அடியாட்கள் மூலம் அத்தொழிலதிபரை தாக்கியுள்ளார். இதையடுத்து ஆதிகேசவன் மீது மகாகவி பாரதி நகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அந்தத்தொழிலதிபர்.
ஆனால் புகார் கொடுத்தவர் மீதே மகாகவி பாரதி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆதி கேசவனை ஜாதியின் பெயரைச்சொல்லி திட்டியதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உதவி ஆணையர் காசிப் கானும், இன்ஸ்பெக்டர் பீர் முகம்மதுவும், ஆதியிடம் பலமுறை பணம் வாங்கியவர்கள் என்றும்,தொழிலதிபர் விவகாரத்திலும் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டே ஆதிக்கு சாதகமாக நடந்து கொண்டதும் விசாரணையில்தெரியவந்தது.
இரண்டு அதிகாரிகளும் தங்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருப்பதாக ஆதியும், சாரதியும் போலீஸ் விசாரணையில்ஏற்கனவே கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்தே இருவரையும் பணியிலிருந்து விடுவித்து கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையர் நடராஜ்உத்தரவிட்டுள்ளார்.