ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு சாத்தியமில்லை
சேலம்:
மேட்டூர் அணையிலிருந்து வருகிற 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என பொதுப் பணித்துறைவட்டாரத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையில் தண்ணீர் இருப்பு இல்லாதது, கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வராதது உள்ளிட்ட காரணங்களால் அணை திறப்புமுறைப்படி நடக்கவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை இல்லை. மேட்டூர் அணையின்மொத்த நீர் இருப்பு 120 அடியாகும். ஆனால் அணையில் தற்போது 54 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையைத் திறக்கவேண்டுமானால் குறைந்தது 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும்.
ஆனால் 54 அடி தண்ணீரே இருப்பதால், இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி அணையைத் திறக்க முடியாத நிலை இருப்பதாகபொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை பெய்ய வேண்டும் அல்லது கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வரவேண்டும். அப்படி நடந்தால் தான் மேட்டூர் அணையைத் திறக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கர்நாடகத்திடமிருந்து உரிய நீரைப் பெறதமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி காவிரிப் பாசனப் பகுதியில் ஏற்கனவே ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருவதுகுறிப்பிடத்தக்கது.